இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஒருவர் அமெரிக்க பொலிஸ் அதிகாரியினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
தொழில்நுட்ப துறையில் பணிபுரியும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட 33 வயதான ராஜ் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
நவம்பர் 15ஆம் தேதி பணி முடிந்து வீடு திரும்பியபோது துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞரின் மரணம் தொடர்பில் பெற்றோர்கள் பல்வேறு தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிட்டிருப்பது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராஜின் வீட்டில் பொருட்கள் திருடப்பட்டதாக சந்தேகமடைந்த ராஜ் துப்பாக்கியுடன் வீட்டு வாசலுக்கு வந்தபோது, திடீரென சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் அதிகாரி, கையிலிருந்த துப்பாக்கியை கீழே போடுமாறு உத்தரவிட்டதாக ராஜின் உறவினர்கள் அமெரிக்க ஊடகங்களுக்கு தெரிவித்தனர். உடனடியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
ஆயுதத்தை தரையில் வைக்க நியாயமான கால அவகாசம் வழங்குவதற்கு முன்னர் பொலிஸ் உத்தியோகத்தர் உடனடியாக ராஜ் முனசிங்க மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சமீபகாலமாக அப்பகுதியில் தொடர் குற்றச் சம்பவங்கள் நடந்து வருவதால் ராஜ் துப்பாக்கியை பாதுகாப்புக்காக வைத்திருந்ததாக சகோதரர் கூறினார்.
அதேநேரம், துப்பாக்கியுடன் வீதியில் நடந்து செல்வதாக கிடைத்த தகவலையடுத்து, நபர் ஒருவர் 911க்கு அழைப்பு விடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்ததாக பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.
இதேவேளை, ராஜ் முனசிங்க சுடப்பட்டதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துப்பாக்கிச் சூடு தொடர்பாக இரண்டு விசாரணைகள் நடைபெற்று வருவதாக ஆஸ்டின் போலீசார் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், துப்பாக்கிச்சூடு தொடர்பான காட்சிகளை அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், ராஜ் முனசிங்கவின் சகோதரர் ஜொஹான் முனசிங்க தனது முகநூலில் தனது சகோதரர் ஒஸ்டின் பொலிஸ் உத்தியோகத்தரால் “கொலை செய்யப்பட்டதாக” பதிவிட்டுள்ளார்.