கோவை : கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு தொடர்பாக மேலும் 3 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்த நிலையில், அவர்கள் சிக்கியது எப்படி என்பது தொடர்பான ஷாக் தகவல்கள் வெளியாகியுள்ளன. கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரத்தில், ஜமேஷா முபீனுக்கு உதவியதாக ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முகமது தவ்ஃபிக், உமர் ஃபரூக், ஃபரோஸ்கான் ஆகிய 3 பேரை அண்மையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களில், உமர் ஃபாரூக், கோவை சம்பவத்திற்குப் பிறகு ஜமேஷா முபின் உடனான தனது வாட்ஸ் -அப் சாட் ஹிஸ்டரியை அழித்ததால் என்.ஐ.ஏ கண்காணிப்பு வளையத்திற்குள் வந்துள்ளார்.
G20க்கு EPS ஐ அழைத்தது எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை – Krishnamoorthy
முகமது தவ்ஃபிக்கிடம் ஜமேஷா முபின், வெடிகுண்டு தயாரிப்பது பற்றிய புத்தகத்தைக் கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவை சிலிண்டர் வெடிப்பு
கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த அக்டோபர் 23ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மத்திய அரசு என்.ஐ.ஏ விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில், என்.ஐ.ஏ. எனப்படும் தேசியப் புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
யாருக்கெல்லாம் தொடர்பு
ஏற்கனவே இந்த குண்டு வெடிப்பு விவகாரத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். தமிழகம் முழுவதும் சுமார் 45 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்களும் இந்த விவகாரத்தில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் 3 பேருக்கு தொடர்பு
இந்தநிலையில், 6 பேரிடம் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையிலும், சோதனையில் கிடைக்கப்பெற்ற ஆவணங்களை ஆய்வு மேற்கொண்டதில் கிடைத்த விவரங்களை வைத்தும் மேலும் 3 பேருக்கு இந்த குண்டு வெடிப்பு விவகாரத்தில் தொடர்பிருப்பது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில், என்.ஐ.ஏ அதிகாரிகள் போத்தனூரைச் சேர்ந்த முகமது தவ்ஃபிக், குன்னூரைச் சேர்ந்த உமர் ஃபரூக், உக்கடத்தைச் சேர்ந்த ஃபரோஸ்கான் என்ற 3 பேரை கைது செய்துள்ளனர்.
முபீன் செல்போன்
கார் குண்டு வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் செல்போன் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில் அவர் குன்னூரைச் சேர்ந்த உமர் பாருக்குடன் அடிக்கடி பேசி இருப்பது உறுதியானது. இருவரும் அடிக்கடி வாட்ஸ் அப்பில் உரையாடி இருக்கிறார்கள். இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதும் அடிக்கடி கோவை குன்னூர் என்று மாறி மாறி பயணம் செய்து சந்தித்துக்கொண்டதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
வாட்ஸ்அப் ஹிஸ்ட்ரி
கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நடந்தவுடன் வாட்ஸ் அப் தகவல் பரிமாற்றத்தை உமர் பாரூக் அழித்ததை என்.ஐ.ஏ போலீசார் கண்டுபிடித்தனர். இதன் மூலம் முபீன் சதித்திட்டத்தில் உமர் பாரூக் முக்கிய கூட்டாளி என்பதை உணர்ந்த போலீசார் தொடர்ந்து அவரை கண்காணித்து வந்த நிலையில், அவரையும் முபினுக்கு நெருக்கமான 2 பேரையும் கைது செய்துள்ளனர்.
வெடிகுண்டு செய்வது பற்றிய புத்தகம்
முபின் தனது நண்பரான போத்தனூரைச் சேர்ந்த முகமது தவ்ஃபிக்கிடம் ஒரு புத்தகம் கொடுத்துள்ளார். அந்தப் புத்தகத்தில் வெடிகுண்டு செய்வது தொடர்பான விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இதையடுத்து முகமது தவ்ஃபிக் வீட்டில் நடத்திய சோதனையில், அந்த புத்தகம் மட்டுமல்லாது மத அடிப்படைவாத பிரசுரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அதன் மூலம் தவ்ஃபிக்கிற்கும் சதித் திட்டத்தில் பங்கு இருப்பதை உறுதி செய்துள்ளனர்.
வாக்குமூலம்
கோவையில் கைது செய்யப்பட்ட இந்த 3 பேரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, தொடர்ந்து ரகசிய இடத்தில் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அவர்களுக்கு கோவை சிலிண்டர் வெடிப்பு விவகாரத்தில் எந்த அளவுக்கு தொடர்புள்ளது என்பது குறித்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.
சிறையில் அடைப்பு
இதையடுத்து, கைது செய்யப்பட்ட 3 பேரையும் பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்பு என்ஐஏ அதிகாரிகள் நேற்று ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி 3 பேரையும் வரும் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, 3 பேரையும் போலீசார் புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.