வவுனியா – புளியங்குளம், பரசங்குளம் பகுதியில் 35 வயதுடைய காட்டு யானை ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது.
விவசாய நிலத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சார கேபிளில் சிக்கி உயிரிழந்த காட்டு யானை நேற்று (27.11.2022) இரவு உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், யானையின் சடலத்தின் பிரேதப் பரிசோதனை இன்று (28.11.2022) இடம்பெற்றதாக வவுனியா வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழந்த காட்டு யானையின் பிரேத பரிசோதனையை வனஜீவராசிகள் திணைக்களத்தின் வடக்கு பிராந்திய பொறுப்பதிகாரி கால்நடை வைத்தியர் பி.கிருதரன் மேற்கொண்டார்.
சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் பரசங்குளம் பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.