மட்டக்களப்பு – ஓட்டமாவடி பிரதேசத்தில் வசிக்கும் பிரபல ஐஸ் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் 16 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் அரபா நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
காகித ஆலை இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் கதிர்வெளி விசேட அதிரடிப்படையினருடன் நேற்று (03.11.2022) இரவு மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் நீண்டகாலமாக மிகவும் தந்திரமாக போதைப்பொருள் விற்பனை செய்து வருவதுடன் கொழும்பில் இருந்து போதைப்பொருள் மொத்தமாக கொண்டு வந்து விற்பனை செய்து வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், குறித்த நபர் போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றும் போதைப்பொருள் விற்பனை செய்த பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
பல தடவைகள் இவரை கைது செய்ய முயற்சித்த போதிலும் நேற்றிரவு கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவரின் பின்னணியில் இன்னும் பல பெரிய புள்ளிகள் இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.