ஏ.ஆர்.ரகுமான் இசையில் சிலம்பரசன் நடித்துள்ள ‘பத்து தல’ படத்தில் இருந்து முதல் பாடல் வரும் மூன்றாம் தேதி வெளியாகிறது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ உள்ளிட்ட படங்களை இயக்கி ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘பத்து தல’.
இதில் பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கலையரசன், கௌதம் வாசுதேவ் மேனன், டீஜே, ஜோ மல்லூரி, மலையாள நடிகை அனு சித்தாரா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா இந்தப் படத்தை தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது.
இதையடுத்து நடிகர் கௌதம் கார்த்திக்கும் நடிகை பிரியா பவானி சங்கரும் தங்களது டப்பிங் பணிகளை முடித்ததாக தெரிவித்திருந்தனர். தற்போது படத்திற்கான இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
முன்னதாக இந்த திரைப்படம் டிசம்பர் மாதமே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒரு சில காரணங்களால் படத்தின் வெளியீடு 3 மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டது. இதனால் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகி வந்தது.
இந்நிலையில், தற்போது படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ‘பத்து தல’ வரும் மார்ச் மாதம் 30-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிலம்பரசன் உடன் இந்த திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கலையரசன், கௌதம் வாசுதேவ் மேனன், டீஜே, ஜோ மல்லூரி, மலையாள நடிகை அனு சித்தாரா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கன்னடத்தில் வெளியாகி வெற்றியடைந்த முஃப்டி என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாகியுள்ளது இந்தப்படம்.
இந்த நிலையில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் இடம் பெறும் படத்தின் முதல் பாடலை வரும் மூன்றாம் தேதி வெளியிடுகின்றனர். அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என படக்குழுவினர் நம்பிக்கையில் உள்ளனர்.