உலகக்கோப்பை கால்பந்தாட்ட தொடரிலிருந்து போர்ச்சுகல் அணி வெளியேறியுள்ள நிலையில், தோல்வியால் மனம் உடைந்துபோன அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ரொனால்டோவுக்கு விராட் கோலி ஆறுதல் தெரிவித்துள்ளார். அவரது சமூக வலைதள பதிவு வைரலாகி வருகிறது.
கத்தார் நாட்டில் உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற காலிறுதி போட்டி ஒன்றில், வலிமை வாய்ந்த போர்ச்சுக்கல் அணி மொராக்கோ அணியை எதிர்கொண்டது.
இந்த போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோ அணி வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. உலகின் நம்பர் ஒன் வீரராக கருதப்படும் ரொனால்டோ அணியில் இருந்தும், போர்ச்சுக்கல் தோல்வியடைந்து இருப்பதை கால்பந்தாட்ட ரசிகர்கள் அதிர்ச்சியுடன் பார்த்து வருகின்றனர்.
தோல்வியால் மனம் உடைந்து கண்ணீர் விட்டு ரொனால்டோ அழுத காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகியுள்ளன. இந்த போட்டியில் ரொனால்டோ 51 ஆவது நிமிடத்தில் தான் களத்தில் இறங்க அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் ரொனால்டோவுக்கு ஆறுதல் தெரிவித்து முன்னணி கிரிக்கெட் வீரர் விராட் கோலி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது_உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கும், கால்பந்தாட்ட விளையாட்டிற்கும் ரொனால்டோ சிறப்பானவற்றை அளித்திருக்கிறார். அவை உலகக்கோப்பைக்கும் அப்பாற்பட்டவை. ரொனால்டோவின் ஆட்டததிற்கு இணையாகஎந்த கோப்பையையும் வழங்க முடியாது என்றுதான் நான் உள்பட அவரது ரசிகர்கள் உணர்கிறோம்.