ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நாளை (பிப்ரவரி 27) நடைபெற உள்ளது. நேற்று பரப்புரையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உரிமை தொகை வழங்கும் திட்டம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், விதிமுறையை மீறி முதலமைச்சர் தேர்தல் பிரச்சாரத்தில் மகளிர் உரிமைத்தொகை குறித்து அறிவிப்பு வெளியிட்டதாக அதிமுக குற்றம்சாட்டியது. தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி முதலமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக தேர்தல் பிரிவு துணை செயலாளர் இன்பதுரை ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
இந்தநிலையில், மகளிருக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டம் என்று நேற்று மாலை நடந்த பரப்புரையின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்தார்.
மேலும், “குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை குறித்து நமக்கு இருக்கும் அக்கறையை விட அவர்களுக்குத்தான் அதிகமாக அக்கறை இருக்கிறதாம். என்ன ஆச்சு, என்ன ஆச்சு என்று கேட்கிறார்கள். தேர்தல் பரப்புரையில் அதுபற்றி நான் கூறிவிட்டேன். உடனே ஸ்டாலின் எவ்வாறு சொல்லலாம் என தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் புகார் அளித்துவிட்டார்கள். நீங்கள்தானே என்னாச்சு என்னாச்சு என்று கேட்டீர்கள். அதற்குத்தான் பதில் கூறியுள்ளோம். அது தேர்தல் விதிமுறைக்கு புறம்பானது அல்ல, ஏற்கனவே நாங்கள் தேர்தல் அறிக்கையில் அறிவித்ததுதான்” என்று கூறியுள்ளார்.