இந்த வருடத்தில் இணையச் சேவை மற்றும் போன் கால் விலையை உயர்த்த உள்ளதாக பார்த் ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் பார்தி மிட்டல் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த மாதம் குறைந்தபட்ச ரிசார்ஜ் விலையை உயர்த்திய நிலையில் மேலும் விலையை உயர்த்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் ஏர்டெல் நிறுவனத் தலைவர் சுனில் பார்தி மிட்டல் இவ்வாறு தெரிவித்துள்ளார். நிறுவனத்திற்கு வரும் லாபம் குறைந்துள்ளதால் ரிசார்ஜ் விலையை உயர்த்த வேண்டி இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் மக்கள் 30 ஜிபி டேட்டா வரை விலையில்லாமல் உபயோகித்து வருகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.
ஏர்டெல் நிறுவனம் தனது குறைந்தபட்ச ரிசார்ஜ் பிளான் ஆன் ரூ.99 பிளானை நிறுத்திவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குறைந்தபட்சமாக ஒரு ரிசார்ஜ்-க்கு ரூ.200 வரை லாபம் வரும் நிலையில் அதை ரூ.300 வரை மாற்றவுள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் உட்கட்டமைப்புகளில் இந்திய அரசு கவனம் செலுத்தி வருவதாகவும், பிஎஸ்என்எல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்களின் உதவியுடன் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் கட்டமைப்புகளை அரசு உயர்த்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, 5ஜி சேவைகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, நாடு முழுவதும் 5ஜி சேவையை வழங்கத் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். இன்னும் சுமார் 100 மில்லியன் வாடிக்கையாளர்கள் 2ஜி சேவையை உபயோகித்து வருவதாகவும் அதனால் 2ஜி சேவையை நிறுத்துவதாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார். paytm நிறுவனத்தின் பங்குகளை வாங்கவுள்ளதாக வரும் தகவல்கள் உண்மை இல்லையென்றும் கூறியுள்ளார்.