சென்னையில் உள்ள ஜெராக்ஸ் கடையில் கொள்ளையடித்தவர்களை சிசிடிவி காட்சிகள் மூலம் கையில் பச்சை குத்தியிருந்த அடையாளத்தை வைத்து போலீசார் கைது செய்தனர்.
சென்னை பள்ளிக்கரணை திருவேங்கடம் நகர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார்(46), பள்ளிக்கரணை பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 28-ம் தேதி இரவு வழக்கம்போல் கடையை மூடிவிட்டு மறுநாள் காலை கடையை திறக்க வந்த போது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் வைத்திருந்த ரூ.5000 மற்றும் செல்போன் திருடுபோனது தெரியவந்துள்ளது.
இதையடுத்து செந்தில்குமார் பள்ளிக்கரணை குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் திருட்டு போன கடையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்ததில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் கையில் பச்சை குத்திய அடையாளம் இருந்தது தெரியவந்துள்ளது.
பின்னர் பச்சை குத்திய அடையாளத்தை மட்டும் வைத்து குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் பழைய குற்றவாளிகள் என தெரியவந்தது. பின்னர் பள்ளிக்கரணை துலுக்காத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் அவரது கூட்டாளியான கண்ணகிநகரை சேர்ந்த சந்தோஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
பின்னர் காவல் நிலையத்தில் வந்து விசாரணை மேற்கொண்டதில் கைதான இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.
மேலும் சதீஷ்குமார் மீது பள்ளிக்கரணை, கண்ணகிநகர், கோட்டூர்புரம் ஆகிய காவல் நிலையங்களில் திருட்டு வழக்கில் சிறை சென்றதும் தெரியவந்துள்ளது. வேறொரு வழக்கில்சிறையில் இருந்த சந்தோஷ்குமார் சதீஷ்குமாருடன் பழக்கம் ஏற்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்த பின்பு இருவரும் இணைந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்ததாக தெரிவித்தனர்.
பின்னர் சந்தோஷ்குமார், சதீஷ்குமார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், கடையிலிருந்து திருடிய செல்போனை போலீசார் கைப்பற்றினர்.