உலகம் முழுவதும் கொரோனா பரவல் 95 விழுக்காடு நீங்கி இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் சீனாவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. கொரோனா பரவலைத் தடுக்க ஜீரோ கோவிட் என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தியது சீன அரசு. அதன்படி பல்வேறு முக்கிய நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மீண்டும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியதோடு, வணிக ரீதியிலான பாதிப்பும் அதிகரித்தது. இதையடுத்து ஊரடங்கை எதிர்த்து பொதுமக்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பரவலாக நாடு முழுவதும் ஊரடங்கை எதிர்த்து போராட்டம் நடத்தியதால் ஊரடங்ககை திரும்ப பெற வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டது சீன அரசு. அதன் பிறகு உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சீனாவில் கொரோனா பரவல் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அதிகரிக்கத் தொடங்கியது.
கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி முதல் இந்த ஜனவரி 12 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 59, 938 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவித்தார் அந்நாட்டின தேசிய சுகாதாரக் குழுவின் மருத்துவ விவகாரக் குழுவின் தலைவர் ஜியா யாகுய். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 13 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜனவரி 13 முதல் 19 ஆம் தேதி வரை இணை நோய் எதுவுமின்றி கொரோனாவால் பாதிக்கப்பட்டு 681 பேர் உயிரிழந்து இருப்பதாக அந்நாட்டு மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இணை நோய் பாதிப்புடன் 11 ஆயிரத்து 977 பேர் உயிரிழந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.
இவை மட்டுமின்றி மருத்துவமனைக்கு வராமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் குறித்த தகவல் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதனிடையே அந்நாட்டில் 80 சதவீதம் பேருக்கு தொற்று பரவியதால், எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உயிரிழப்புகள் இனி குறையும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.