நீதித்துறையின் சுதந்திரமான செயல்பாட்டை சீர்குலைக்க மத்திய அரசு தீவிரமாக முயற்சித்து வருவதாக கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.
தெலங்கானாவில் பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மன், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், கொலிஜியம் முறையை மாற்றக் கோரி மத்திய சட்டத்துறை அமைச்சர் கடிதம் எழுதியிருப்பது நீதித்துறையின் சுதந்திரமான செயல்பாட்டை சீர்குலைக்கும் முயற்சி என்று குற்றம்சாட்டியுள்ளார்.
நாட்டின் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்காத, ஆங்கிலேயர்களிடம் பல முறை மன்னிப்பு கோரியவர்களின் கைகளில் இன்று அதிகாரம் இருப்பதாக அவர் விமர்சித்துள்ளார். மேலும் இந்தி மொழியை திணிக்க முயற்சிப்பது நாட்டின் ஒருமைப்பாட்டை பாதிக்கும் என்று பினராயி விஜயன் கூறியுள்ளார்.