விளையாட்டு போட்டியில் ஹிஜாப் இல்லாமல் பங்கேற்ற ஈரான் நாட்டைச் சேர்ந்த சர்வதேச வீராங்கனையின் வீட்டை அந்நாட்டு அரசு இடித்து தரைமட்டமாக்கியுள்ளது.
இஸ்லாமிய நாடான ஈரானில் இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படுகிறது. அங்கு 9 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கட்டாயம் ஹிஜாப் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற சட்ட விதிமுறைகள் பின்பற்றவது கண்காணிப்பதற்கு என்று கலாசார காவல்படை (Morality Police) என்ற தனி காவல்பிரிவு உருவாக்கப்பட்டிருந்தது. இந்த காவல்படை பிரிவு, விதிமுறைகளை மீறும் நபர்களிடம் பார்த்த இடத்திலேயே கடும் தண்டனை வழங்கி அச்சுறுத்தலை அளித்து வந்தது.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி ஹிஜாப் அணியாமல் காரில் பயணம் செய்த 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் இந்த கலாசார காவல்துறையினரின் தாக்குதலில் உயிரிழந்தார். ஈரானில் இந்த சட்டத்திற்கு எதிராக பெண்கள், கல்லூரி மாணவர்கள், மனித உரிமையாளர்கள உள்ளிட்டோர் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த போராட்டத்திற்கு அந்நாட்டின் பல முன்னணி பிரபலங்களும் ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் அந்நாட்டைச் சேர்ந்த சர்வதேச வீராங்கனையான எல்னாஸ் ரெகாபி தென்கொரியாவில் நடைபெற்ற சர்வதேச தடையேறுதல் போட்டியில் பங்கேற்றிருந்தார். இவர் இந்த போட்டியில் அரசின் விதிகளை பின்பற்றாமல் ஹிஜாபை கழற்றி, தனது தலைமுடியை போனிடெயிலாக போட்டுக்கொண்டு போட்டியில் பங்கேற்றார். இவரின் இந்த செயலுக்கு ஹிஜாப் போராட்டக்கரார்களிடையே பெரும் ஆதரவு கிடைத்தது. பலரும் எல்னாஸை ஹீரோ என்று பாராட்டினர்.