டிசாவின் ஜர்சுகுடா மாவட்டம் பரஜராஜ்நகர் அருகே உள்ள காந்தி சவுக் பகுதியில், நடைபெற்ற பிஜு ஜனதா தளம் கட்சியின் புதிய அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்க மாநில சுகாதாரத் துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் சென்றார். காரில் இருந்து இறங்கிய அமைச்சர் மீது பாதுகாப்புப் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் கோபால் தாஸ், துப்பாக்கியால் சுட்டதில், அமைச்சரின் மார்பில் இரண்டு குண்டுகள் பாய்ந்தன.
ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து கவலைக்கிடமான நிலையில் இருந்த அமைச்சரை மீட்ட சக பாதுகாவலர்கள், உடனடியாக ஏர் ஆம்புலன்ஸ் மூலம் புவனேஸ்வரில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அமைச்சர் நபா தாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.
அமைச்சர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய உதவி ஆய்வாளர் கோபால் தாஸ் கைது செய்யப்பட்டார். கோபாலுக்கும் அமைச்சருக்கும் எந்த முன்விரோதமும் இல்லை என்று கூறியுள்ள போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் கோபால் தாஸ் பல ஆண்டுகளாக மன அழுத்தம் மற்றும் உயர் ரத்த அழுத்ததால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அவர் தொடர்ந்து மருந்து எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. பணிக் காலத்தில் 19 பதக்கங்களையும் அவர் வென்றிருக்கிறார்.
உறவினர் ஒருவருக்கு வேலை கேட்டு சுகாதாதாரத் துறை அமைச்சர் நபா தாஸை மூன்று மாதங்களுக்கு முன்பு கோபால்தாஸ் சந்தித்துள்ளார். ஆனால் வேலை வாங்கித் தராததால் அமைச்சரை கொலை செய்ததாக அவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்பாராத விதமாக அமைச்சர் நபாதாஸ் உயிரிழந்த சூழலில் அவர் வகித்த சுகாதாரத்துறை அமைச்சர் பதவியை நிதியமைச்சர் நிரஞ்சன் புஜாரிக்கு நவீன் பட்னாயக் அளித்துள்ளார்.