Thursday, April 25, 2024
Homeஅரசியல்செய்தி8 போலீசார் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்..செம்பு லிங்கம் மறைவிற்காக அவேசமாக பேசிய வெல்...

8 போலீசார் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்..செம்பு லிங்கம் மறைவிற்காக அவேசமாக பேசிய வெல் முருகன்!

அரியலூர் : அரியலூர் விவசாயி செம்புலிங்கம் மரணத்திற்கு காரணமான 8 போலீசார் மீதும் கொலை வழக்கு பதிவு செய்வதோடு, அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தவாக தலைவரும் எம்.எல்.ஏவுமான வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இளைஞர் ஒருவரின் வீட்டுக்கு விசாரணைக்குச் சென்ற போலீசார், குடும்பத்தினரை கடுமையாக தாக்கியதில், இளைஞரின் தந்தை படுகாயமடைந்தார். பின்னர் சிகிச்சை பெற்று வந்தபோது, போலீsஆர் தன்னை தாக்கியதால்தான் காயமடைந்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்நிலையில், அவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காசாங்கோட்டை சம்பவம்
அரியலூர் மாவட்டம் காசாங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் அருண்குமார் உள்ளிட்ட 5 பேர் மீது மாற்று சமூகத்தினர் அளித்த புகாரில் அவர் உட்பட 5 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அருண் குமார் வீட்டுக்கு போலீசார் சென்றபோது, அவர் வீட்டில் இல்லாத நிலையில், அவரது குடும்பத்தினரை போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அருண்குமாரின் தந்தை செம்புலிங்கம் சிகிச்சை பலனின்றி பலியானார். இச்சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயி வீட்டில்
இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், பண்ருட்டி எம்எல்ஏவுமான வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரியலூர் மாவட்டம் காசாங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செம்புலிங்கம். இவரது மருமகன் அருண்குமார் மீது அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், விக்கிரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து குற்றப்பிரிவு தலைமைக் காவலர் பழனிவேல் தலைமையில் 8 காவலர்கள் கடந்த நவம்பர் 25ஆம் தேதி செம்புலிங்கம் வீட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால், வீட்டில் அருண்குமார் இல்லை.
செம்புலிங்கம் மரணம்
இதன் காரணமாக, ஆத்திரமடைந்த பழனிவேல் தலைமையிலான காவலர்கள் வீட்டில் இருந்த செம்புலிங்கம், அவரது மனைவி சுதா, மகன் மணிகண்டன் ஆகிய மூவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். அதனால் காயமடைந்த மூவரும் அரியலூர் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வீடு திரும்பினார்கள். இதில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த செம்புலிங்கம் நேற்று உயிரிழந்து விட்டார். அவரது மரணத்துக்கு காவல்துறையினர் தான் காரணம் எனக்கூறி, செம்புலிங்கம் குடும்பத்தினர், உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.
காவல்துறை அதிகாரிகளின் அராஜகம்
ஆனால், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யாத காவல்துறை, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, காவல் துறையினருக்கு அளித்த வாக்குமூலத்தில், தன் மீதும், குடும்பத்தினர் மீதும், நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து செம்புலிங்கம் தெளிவாக கூறியுள்ளார். தமிழ்நாட்டில் ஒரு சில காவல்துறை அதிகாரிகளின் அராஜகமும், அதிகார அத்துமீறலும் தொடர்ச்சியாக நடந்து வரும் நிலையில், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, எதிர்காலத்தில் காவல்துறையிடம் இருந்து பொதுமக்களை காக்க முடியும்.
8 போலீசார் மீதும்
எனவே, செம்புலிங்கத்தின் மரணத்திற்கு காரணமான 8 காவலர்கள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்வதோடு, அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். செம்புலிங்கம் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது” என வலியுறுத்தியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments