மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, ஒன்பது மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த நிலையில், அதற்கான வேலைகளை ஏற்கெனவே பா.ஜ.க தொடங்கிவிட்டது.
அதன் முன்னேற்பாடாக பா.ஜ.க-வின் இரண்டு நாள் தேசிய செயற்குழுக் கூட்டம் ஜனவரி 16, 17 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற்றது. இதில், கர்நாடக சட்டசபைத் தேர்தல் உட்பட வரும் நாடாளுமன்றத் தேர்தல்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன.
அதில், 2024 -ம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-வின் திட்டம் குறித்த அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார்.
அதைத் தொடர்ந்து பேசிய பா.ஜ.க மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், “பிரதமர் மோடி இந்தக் கூட்டத்தின் மூலம் நம்மிடம் பல செய்திகளைப் பகிர்ந்திருக்கிறார். அதில் குறிப்பிடத்தக்கவற்றில் சிலவற்றை கவனப்படுத்துகிறேன்.
நம்மிடம் 400 நாள்கள் இருக்கின்றன. மக்களுக்கு சேவை செய்வதற்கான அனைத்தையும் செய்ய வேண்டும். சரித்திரம் படைக்க வேண்டும். 18-25 வயதுக்குட்பட்டவர்கள் மீது நமது கவனத்தை முழுமையாகச் செலுத்த வேண்டும்.
ஏனென்றால், அவர்களுக்கு சரித்திரமோ, முந்தைய அரசுகளின் தவறான நிர்வாகம் பற்றிய தகவல்களோ அல்லது நாம் எப்படி நல்லாட்சியை நோக்கி நகர்கிறோம் என்பது பற்றிய செய்திகளோ பரிச்சயமிருக்காது.
நாம் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி ஜனநாயக வழிகளை அறிமுகப்படுத்த வேண்டும். மேலும், நல்லாட்சியின் ஒரு பகுதியாக இருக்க அவர்களுக்கு உதவ வேண்டும்.
எல்லைப் பகுதிகள் உட்பட கிராமங்களின் அமைப்பை வலுப்படுத்துவதில் கட்சி கவனம் செலுத்த வேண்டும். அதன் தலைவர்கள் எல்லாத் தரப்பு மக்களையும் சந்திக்க வேண்டும். குறிப்பாக சிறுபான்மையினரான போஹ்ராக்கள், பாஸ்மந்தாக்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் தேர்தலைக் கருத்தில்கொள்ளாமல் அணுக வேண்டும்.