7 வயது சிறுவன் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு பாரிய காயங்களுடன் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் நேற்று (31) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், கந்தகெட்டிய – களுகஹகடூர கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தந்தைக்கு மொபைல் போன் ரீசார்ஜ் கார்டு வாங்க கடைக்கு சென்ற சிறுவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த சிறுவனின் தந்தை, சிறுவனிடம் 100 ரூபாவை கொடுத்து ரீஃபில் கார்ட் வாங்கி தருமாறு கூறியதாக தெரிவித்தார்.
கடைக்கு செல்லும் சாலை மிகவும் சிறியது. இருபுறமும் காடுகள் இருப்பதாகச் சொன்னார். மகன் கடைக்குச் சென்று 5 நிமிடத்தில் அலறினான்.
அப்போது தனது வீட்டிற்கு அடிக்கடி வரும் நபர் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடியதை அவதானித்ததாக அவர் கூறினார். மகன் கடைக்குச் செல்வதற்கு முன்னதாகவே சந்தேகநபர் வீட்டுக்கு வந்ததாகவும், சந்தேகநபரிடம் தேநீர் அருந்தச் சொன்னபோது மறுத்து வெற்றிலையை விட்டுச் சென்றதாகவும் தந்தை கூறினார்.
இந்த நிலையில், சந்தேகநபரான 51 வயதுடைய நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மறுபுறம், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ஐந்து நிபுணர்கள் கொண்ட குழு சத்திரசிகிச்சையை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சிறுவன் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.