பாடசாலை மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டுமென இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹால்டன் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (14) சந்தித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டுகளுக்கு தேவையான அறிவு, பயிற்சி, தொழில்நுட்பம் மற்றும் புரிதலை வழங்க பிரித்தானிய அரசாங்கம் தயாராக இருப்பதாக சாரா ஹால்டன் கூறினார்.
இது தவிர அடுத்த சந்ததியினரை போதைப்பொருளின் அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்க பிரித்தானியா ஆதரவளிக்கும் என உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.