வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 303 இலங்கையர்களில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் அகதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டு மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் யாழ்ப்பாணம், சாவக்கச்சேரி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
303 இலங்கைத் தமிழ் அகதிகளை ஏற்றிக்கொண்டு கனடாவுக்குச் சென்ற மீன்பிடிப் படகு மூழ்கியதை அடுத்து, பயணிகள் சிங்கப்பூர் அதிகாரிகளால் மீட்கப்பட்டு கடந்த (08.11.2022) வியட்நாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
எந்த சூழ்நிலையிலும் இலங்கைக்கு திரும்பப் போவதில்லை என தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை நாடு கடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவர்கள் இலங்கைக்கு திரும்பப் போவதில்லை எனவும் தெரிவித்து அகதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இருவர் தற்கொலைக்கு முயன்றதாக அண்மையில் செய்தியொன்று வெளியாகியிருந்தது.
இந்நிலையில், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முன்னதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும் தீவிர சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது.