சவூதி அரேபியாவில் இருந்து வந்த விமானத்தில் தன்னை சந்தித்த பெண் ஒருவர் தனது இரண்டு வயது மகனை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று களுத்துறையில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் களுத்துறை தெற்கு போதியாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.சாந்த அப்புஹாமி பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சவூதி அரேபியாவில் சுமார் 11 ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு விமானம் மூலம் நாடு திரும்பிக் கொண்டிருந்தார். 2 வயது சிறுவனுடன் பெண் ஒருவர் விமானத்தில் அறிமுகமாகியுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து களுத்துறைக்கு செல்லுமாறு கூறியதால் வாடகை வாகனத்தில் குழந்தையையும் பெண்ணையும் களுத்துறைக்கு அழைத்து வந்ததாக முறைப்பாடு செய்த நபர் தெரிவித்துள்ளார்.
களுத்துறை நகருக்கு வந்த போது குளிர்பானம் வாங்கி வருவதாக கூறிவிட்டு குழந்தையை கொடுத்து விட்டு வாகனத்தில் இருந்து இறங்கியவர் திரும்பி வரவில்லை என முறைப்பாடு செய்த நபர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு பொலிஸ் பரிசோதகர் நுவந்தி தலைமையிலான அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.