வவுனியா – இராசேந்திரன்குளம் சமுர்த்தி உத்தியோகத்தரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் இன்று (24.11.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இராசேந்திரங்குளம், விநாயகபுரம், பாரதிபுரம், பொன்னவரசன்குளம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய சமுர்த்தி உத்தியோகஸ்தம் 3 வருடங்களின் பின்னர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த உத்தியோகத்தர் கிராம மக்களுக்கு உதவக்கூடியவராக இருந்ததாகவும், கொவிட் காலத்தில் மக்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் பாதுகாப்பிற்காக சமுர்த்தி கொடுப்பனவுகளை வழங்கியதாகவும் இது தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.
அவர் நேரடியாக மக்கள் வீடுகளுக்கு வந்து அவர்களின் நிலையை அறிந்து கொள்வார். அப்படிப்பட்டவரை இடமாற்றம் செய்ய அனுமதிக்க முடியாது என்று கூறினர்.
வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினரும் அகில இலங்கை வாலிபர் முன்னணியின் தலைவருமான விக்டர்ராஜ் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடி பொதுமக்களின் கோரிக்கை மனுவை பெற்று பிரதமரிடம் சமர்பிப்பதாக உறுதியளித்ததை அடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.