வரலாற்றிலேயே முதல் தடவையாக அரச ஊழியர்களுக்கான மாதாந்த சம்பளத்தை குறிப்பிட்ட தினத்துக்குள் செலுத்த முடியாது போயுள்ளதாகவும் நிறைவேற்று அதிகாரம் அல்லாத ஊழியர்களின் சம்பளத்தை குறிப்பிட்ட தினத்தில் செலுத்துவதற்கு திட்டமிட்டிருந்த போதிலும் நிறைவேற்று அதிகாரிகளின் சம்பளத்தை செலுத்துவதற்கு தாமதமாகியுள்ளதாக போக்குவரத்து, பெருந்தெருக்கள் அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்த்தன நேற்று (17) தெரிவித்தார்.
அரச தகவல்கள் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிய தரும் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.
நாட்டின் அத்தியாவசிய செலவுகளை மேற்கொள்வதற்கே இலங்கை அரசாங்கத்துக்கு முடியாதுள்ளதென தெரிவித்துள்ள அமைச்சர் பந்துல குணவர்தன நிதி நடவடிக்கைகள் முடிவடைந்த டிசம்பர் மாதத்தில் திறைச்சேரிக்கு வருமானமாக 147 பில்லியன் ரூபாய் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அதில் 88 பில்லியன் அரச ஊழியர்களின் சம்பளத்தை செலுத்துவதற்கும் ஓய்வூதிய கொடுப்பனவுகள் மற்றும் சமூர்த்தி கொடுப்பனவுகளுக்கு 30 பில்லியனும் உரத்தைப் பெற்றுக் கொள்ள 6.5 பில்லியனும் சுகாதார அமைச்சுக்கு அத்தியாவசியமான மருந்து வகைகளுக்காக 8.7 பில்லியனும் ஏனைய செலவுகளை உள்ளடக்கி 154 பில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளது.
திறைசேரியின் வருமானம் 147 பில்லியன் ஆக இருந்தபோதும் செலவு 154 பில்லியன் என்றால் அந் நிலைமையை எவ்வாறு முகாமைத்துவம் செய்வது? என்ற கேள்வி எழுமென சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்த நிதி வெளிநாட்டுக் கடன் மற்றும் வட்டியை செலுத்துவதற்கு செலவிடப்பட்ட தொகையை உள்ளடக்காமலேயே கணக்கிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.