ரஞ்சி கோப்பை தொடரில் உத்தரகாண்ட் அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் கர்நாடக அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்தியாவில் முதல் தர கிரிக்கெட் போட்டியாக விளங்கும் ரஞ்சி கோப்பை தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது. பெங்களூருவில் நடந்த போட்டியில் 8 முறை கோப்பையை வென்ற கர்நாடக அணியும் உத்தரகாண்ட் அணியும் மோதின.
முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த உத்தரகாண்ட் அணி 55.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக குணால் சந்தேலா 31 ரன்களை எடுத்தார். கர்நாடக அணி தரப்பில் வெங்கடேஷ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய கர்நாடக அண 162.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 606 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் கோபால் 161 ரன்களும், சமர்த் 82 ரன்களும், மயங்க் அகர்வால் 83 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து 490 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்சை தொடங்கி உத்தரகாண்ட் அணி 73.4 ஓவரில் 209 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் கர்நாடக அணி ரஞ்சி கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
முன்னதாக நடைபெற்ற மற்றொரு காலிறுதி போட்டியில் ஜார்க்கண்ட் அணியை பெங்கால் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மற்ற 2 காலிறுதிப் போட்டிகளில் ஆந்திரா – மத்திய பிரதேசத்தையும், சவுராஷ்டிரா – பஞ்சாபையும் எதிர்கொண்டு விளையாடி வருகின்றன. ரஞ்சி கோப்பையின் அரைறுதி போட்டிகள் வரும் 8ஆம் தேதி தொடங்குகிறது. இறுதிப் போட்டி வரும் 16 ஆம் தேதி ஆரம்பம் ஆகிறது.