இந்தியாவில் மொபைல் போன் பயன்படுத்தும் ஆண்களைவிட பாதிக்கும் குறைவாகவே பெண்கள் மொபைல் போனை பயன்படுத்துகிறார்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியா சமத்துவமின்மை அறிக்கை 2022- டிஜிட்டல் டிவைட் என்ற அறிக்கையை ஆக்ஸ்பார்ம் இந்தியா என்ற தனியார் அமைப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், இந்தியாவில் மொபைல் மற்றும் இணையப் பயன்பாடு குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் 61 சதவீத ஆண்கள் மொபைல் போனை பயன்படுத்துகின்றனர். அதே நேரத்தில் 31 சதவீத பெண்கள் மட்டுமே மொபைல் போனை பயன்படுத்துகின்றனர்.
பெண்கள் மொபைல் போன் பயன்படுத்துவதன் மூலம் அவர்கள் சுதந்திரமாகவும், தகவல்களை எளிதில் தெரிந்துகொள்ளக் கூடிய நபரமாகவும், முடிவுகள உறுதியாக எடுக்கக் கூடிய நபராகவும் மாற்றும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையத்தைப் பயன்படுத்துவதில் 3-ல் ஒருவர் மட்டுமே பெண் என தெரியவந்துள்ளது. இணையப் பயன்பாட்டில் ஆசிய நாடுகளிலேயே இந்தியாவில் தான் 40 சதவீத இடைவெளி உள்ளது.
இந்திய ஆண்களை விட பெண்கள் 33 சதவீதம் குறைவாக மொபைல் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். அதிகமான பெண்களை ஸ்மார்ட் போன் வசதியில்லாமலேயே இருக்கின்றனர். பாலினத்தைக் கடந்து டிஜிட்டல் பயன்பாட்டில் சாதி, கல்வி, பணம் ஆகிய காரணிகளாலும் வேறுபாடுகள் அதிகமாக உள்ளது.
டிஜிட்டல் பயன்பாட்டிலிருந்து தொலைவில் இருப்பதன் காரணமாக விளிம்புநிலை மக்கள் கல்வி, சுகாதாரம், பொதுச் சேவைகளைப் பயன்படுத்துவதில் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்கின்றனர். இந்தியாவிலுள்ள 20 சதவீத ஏழைக் குடும்பங்களில் 2.7 சதவீத குடும்பங்கள் மட்டுமே கணினி பயன்படுத்தும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.