ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாமக போட்டி இல்லை எனவும் கூட்டணி வேட்பாளருக்கும் பாமக ஆதரவு இல்லை என்றும் பாமக மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகளில் காங்கிரஸ் மற்றும் அதிமுக போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக தற்போது இந்த தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளனர். மேலும் அதிமுக கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கும் தங்கள் ஆதரவு இல்லை என பாமக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இந்த தேர்தலில் ஏதெனினும் கட்சிக்கு ஆதரவளித்தால் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு சமிக்கையாக அமையும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியே வெற்றி பெறும் என்பதால் பாமக இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்பது எங்களின் கொள்கை முடிவு என்று பாமக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். கடைசியாக 2009யில் பென்னாகரம் இடைத்தேர்தலில் பாமக போட்டியிட்டதும் அதற்கு பிறகு பாமக எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.