தமிழகத்தில், குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இதனை எதிர்த்து சென்னை உர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்தநிலையில், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் வாய் புற்றுநோய்க்கான முதன்மை காரணம் குட்கா மற்றும் பான் மசாலா போன்ற புகையிலை பொருட்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கில் சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் குட்கா, பான் மசாலாவை தடை செய்ய தற்போதுள்ள விதிகளில் திருத்தம் செய்யலாமா அல்லது புதிய சட்டத்தை இயற்றலாமா என்பதையும் சட்ட வல்லுநர்களுடன் ஆய்வு நடத்தி வருவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.