2022ஆம் ஆண்டு பாடசாலைகளுக்கான அரசாங்க நிதியுதவி கிடைக்காத காரணத்தினால் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் அடுத்த வருடத்திற்கான கட்டணத்தை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் நாயகம் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் தரவுகளை ஒரே கட்டமைப்பின் கீழ் கொண்டுவரும் திட்டம் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இதன் மூலம் ஆசிரிய அதிபர் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட அனைத்து விடயங்களும் தொழில்நுட்ப முறைமையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொழில்நுட்ப கல்வி முறையை மேம்படுத்த திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இன்னும் இரண்டு வாரங்களில் அவற்றுக்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
ஆயிரக்கணக்கான பள்ளிகளுக்கு புதிய இணைய வசதிகளை வழங்க பத்தியில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தவொரு பாடசாலையையும் தனித்து விடாமல் அனைத்து பாடசாலைகளையும் ஒன்றிணைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.