பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் விவகார அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவின் உறுப்பினர்கள் கூட்டாகவும் தனித்தனியாகவும் நாட்டில் தற்போதுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை ஆய்வு செய்வார்கள்.
அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இது தவிர பயங்கரவாதத்தை தடுக்கும் வகையில் புதிய சட்ட ஏற்பாடுகளை உருவாக்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
சர்வதேச நாடுகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த வலுவான சட்டங்கள் தேவை என விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனவே, அதில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
எது எவ்வாறாயினும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் சர்வதேச நாடுகளின் கோரிக்கைக்கு அமைவாக பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதாக அரசாங்கம் கூறினாலும், கடுமையான விதிமுறைகளுடன் கூடிய சட்டத்தை கொண்டு வரலாம் என மனித உரிமை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். .
இந்தச் சட்டங்கள் எதிர்காலத்தில் ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் போராட்டங்கள் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தடுக்க பயன்படுத்தப்படலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இலங்கையில் அமுலில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என உலக நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் யோசனைகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளன.