சென்னை மெரினா கடற்கரையில் கல்லூரி மாணவர்கள் கத்தி மற்றும் பாட்டில்களை கொண்டு மோதிக்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மெரினா கடற்கரையில் இரு தரப்பு கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் தலைமறைவாக உள்ள மாணவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
மாநில கல்லூரியில் முதல் மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் இரு தரப்பு மாணவர்களுக்கு இடையே நீண்ட நாட்களாக மோதல் நீடித்து வந்ததாகத் தெரிகிறது. அது தொடர்பாக மெரினா கடற்கரையில் மாணவர்கள் மீண்டும் மோதிக் கொண்டனர்.
பட்டப்பகலில் கத்தி மற்றும் பாட்டில்களை வைத்து இருதரப்பினரும் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர். இதில் 3 மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மெரினா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடி தலைமறைவாக உள்ள மாணவர்களைத் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.