ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் நானே போட்டியிட வாய்ப்புள்ளதாக டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் இடைத் தேர்தலில் காங்கிரஸ் – அதிமுக இடையே நேரடி போட்டி உருவாகியுள்ளது. காங்கிரஸ் சார்பில் அதன் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மேலும் எடப்பாடி பழனிசாமி அணி தரப்பிலிருந்து அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் இன்று முதல் தலைமை கழகத்திலிருந்து விருப்பமனு பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிவகங்கை அருகே பாகனேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொது செயலாளர் டி.டி.வி.தினகரன், ”நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைதேர்தலில் அமமுக சார்பில் நானே போட்டியிட வாய்ப்புள்ளது. வருகிற 27 ஆம் தேதி வேட்பாளர் யாரென அறிவிக்கப்படும் என தெரிவித்தார். ஓ.பி.எஸ், இ.பி.எஸ் பிரச்சனையால் இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்புள்ளது. இவர்களுக்குள்ளேயே பிரச்சனை இருக்கும்போது நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி என்பது சாத்தியமில்லை. அதிலும் குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணிக்கு சாத்தியமில்லை என்றும் அதிமுக இரண்டு அணிகளும் இணைவது என்பது அத்தைக்கு மீசை முளைப்பதுபோல் என தெரிவித்தார்.
மேலும் தேர்தல் வாக்குறுதிகள் எதையும் திமுக நிறைவேற்றாததால் திமுகவிற்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றும் பேசினார்.