Tuesday, April 23, 2024
Homeஆன்மீகம்தைப்பூச தெப்ப திருவிழா... ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் தீர்த்த கிணறுகளில் 5ம் தேதி நீராட அனுமதி...

தைப்பூச தெப்ப திருவிழா… ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் தீர்த்த கிணறுகளில் 5ம் தேதி நீராட அனுமதி இல்லை

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச தெப்ப திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு தைப்பூச தெப்பத் திருவிழா வருகிற 5ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) லட்சுமண தீர்த்த தெப்பக்குளத்தில் நடைபெறுகிறது.

இந்த தெப்ப திருவிழாவை முன்னிட்டு 5ஆம் தேதி ராமேஸ்வரம் கோவிலின் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, 5 மணி முதல் 5.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜையும் நடைபெறும். தொடர்ந்து கால பூஜைகள் நடைபெறும்.

பின்னர் காலை 10 மணிக்கு சுவாமி-அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகளுடன் கோவிலில் இருந்து புறப்பாடாகி லட்சுமண தீர்த்தத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பின்னர் இரவு 7 மணிக்கு சுவாமி-அம்பாள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வைக்கப்பட்டு தெப்பக்குளத்தில் 11 முறை சுவாமி- அம்பாள் தெப்பத்தை சுற்றி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பின்னர் மீண்டும் சுவாமி-அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் அங்கிருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு கோவிலுக்கு வந்தடைவர்.

இதனைத் தொடர்ந்து அர்த்தசாம பூஜை, பள்ளியறை பூஜை நடத்தப்பட்டு கோவில் நடை சாத்தப்படும். எனவே, தெப்ப திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு வருகிற 5ஆம் தேதி காலை 10 மணியிலிருந்து இரவு வரையிலும் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் தீர்த்தமாடவோ, தரிசனம் செய்யவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 4ஆம் தேதி (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு பிள்ளையார் தெப்ப உற்சவமும் தீர்த்த தெப்பக்குளத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments