பிரபல நகைச்சுவை நடிகரான யோகி பாபு, அறிமுக இயக்குநர் ஷான் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொம்மை நாயகி’ படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சுந்தரமூர்த்தி கே.எஸ். இசையமைத்துள்ளார்.
பொம்மை நாயகி படம் பிப்ரவரி 3 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
கடலூர் கடற்கரையோர பகுதிகளில் உருவாகியுள்ள இப்படத்தில் குழந்தை நட்சத்திரம் ஸ்ரீமதி, யோகி பாபுவுக்கு மகளாக நடித்துள்ளார்.
இப்படத்தில் ‘வட சென்னை’, ‘கபாலி’ போன்ற படங்களின் மூலம் பிரபலமான சுபத்ராவும், ‘மெட்ராஸ்’ புகழ் ஹரி கிருஷ்ணனும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமூகம் மற்றும் அரசியல் அவர்களின் வாழ்வாதாரத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை படம் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
தந்தையாக யோகி பாபு நடித்துள்ள நிலையில், இதுவரை நகைச்சுவை கதாபாத்திரங்களில் அவரை பார்த்து பழகிய ரசிகர்களுக்கு, இது நிச்சயம் புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய யோகி பாபு, எல்லா மேடைகளிலும் என்னை நான் காமெடியன் என சொல்வதற்கு காரணம் அதுதான் என் தொழில். காமெடியன் ஆக வேண்டும் என்பதற்காகத்தான் தெருத்தெருவாக வாய்ப்பு தேடி அலைந்தேன்.
பலரும் என் முகத்தை கிண்டல் செய்துள்ளனர். மேக்கப் போடும்போது திட்டியுள்ளனர். இதெல்லாம் எல்லா நடிகர்களுக்கும் நடப்பதுதான். எனக்கு கொஞ்சம் அதிகமாகவே நடந்துள்ளது. எப்பவும் என் முகம் ஜோக்கர் முகம்தான். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் எந்த சினிமாவுக்கு சென்றாலும் நான் காமெடியன்தான் என்று குறிப்பிட்ட்ளார்.