ஒடிசாவில் சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸை பாதுகாப்பு பணியில் இருந்த உதவி காவல் ஆய்வாளரே துப்பாக்கியால் சுட்ட சம்பவத்தில் படுகாயம் அடைந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது அமைச்சரவையில், சுகாதாரத்துறை அமைச்சராக உள்ளவர் நபா கிசோர் தாஸ். இவர், ஜார்சுகுடா மாவட்டம் பிரச்ராஜ் நகரில் குறைதீர்க்கும் அலுவலகத் திறப்பு விழாவில் பங்கேற்க சென்றிருந்தார். அப்போது, காரில் இருந்து இறங்கிய நபா கிசோர் தாஸை, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி காவல் ஆய்வாளர் கோபால் தாஸ், 2 முறை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.
இதில், 2 குண்டுகள் மார்பில் பாய்ந்ததில் அமைச்சர் நபா கிசோர் தாஸ் நிலை குலைந்து சரிந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு காரில் கொண்டு சென்றனர். அவரது உடல்நிலை கவலைக்கிடமானதையடுத்து, ஜார்சுகுடா விமான நிலையத்தில் இருந்து வான் வழியாக புவனேஸ்வருக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.
இந்நிலையில் மருத்துவமனையில் உயிரிகாக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.