சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை வெற்றியடைந்து தற்போது இறுதிக்கட்டத்தில் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இடைக்கால வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்தவுடன் அது தொடர்பில் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 1ஆம் தேதி முதல் மதிப்பு கூட்டு வரி 12 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயரும் என்றும் அவர் கூறினார்.
மேலும், பணவீக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
வரி வருவாயை அதிகரித்து பணம் அச்சிடுவதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அத்துடன் வரி அறவீடுகளை முறைப்படுத்தி அரசாங்க வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்யும் யோசனை முன்மொழியப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசு மற்றும் அரை அரசு துறைகளில் ஓய்வு பெறும் வயது 60 ஆக குறைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
சேவையில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் 2022 டிசெம்பர் மாதத்திற்குள் ஓய்வு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.