முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீளக் கைப்பற்றும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து அரசாங்கத்திற்குச் சென்று அமைச்சுப் பதவிகளைப் பெற்றவர்களுடன் இணைந்து இந்த செயற்பாட்டை ஆரம்பித்துள்ளார்.
இது தொடர்பான முதலாவது கூட்டம் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் வீட்டில் நடைபெற்றது. சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க மற்றும் சாந்த பண்டார ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இறுதியாக முன்னாள் ஜனாதிபதியை சந்திக்க தீர்மானிக்கப்பட்டது. இந்த யோசனையை துமிந்த திஸாநாயக்க மற்றும் லசந்த ஆசைவன்ன ஆகியோர் முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில், திங்கட்கிழமை காலை அமைச்சர் மஹிந்த அமரவீர முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
மாலையில் சந்திக்கலாம் என முன்னாள் ஜனாதிபதி பதிலளித்தார். இதன் பின்னர், இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தவிர்ந்த ஏனையோர் கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்துள்ளனர்.
மைத்திரிபாலவையும், தயாசிறியையும் எனக்கு பிடிக்கவே பிடிக்காது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.எனது அரசியல் வாழ்க்கையில் நான் செய்த மிகப் பெரிய தவறு மைத்திரிபாலவை ஜனாதிபதியாவதற்கு உதவியதாகும்.
கட்சியை சர்வாதிகாரத்தை நோக்கி அழைத்துச் சென்றார். சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முயற்சிக்கிறார். நான் கட்சி மாற முயற்சிக்கவில்லை. தலைவர் பதவிக்கு வேறு யாராவது வந்துவிடுவார்கள் என்று அஞ்சுபவர்கள் கட்சியின் பெயரை மாற்றிவிடுவார்கள்,” என்றார்.
அப்போது, ‘‘மீண்டும் தேர்தலில் போட்டியிடுவீர்களா? என நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுள்ளனர். இதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன். ஆலோசகராக கட்சியை காப்பாற்ற தலையிடுவேன்,” என்றார்.