திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை தற்போது ஒரு லட்சத்தை கடந்துள்ளது. இதனால் பக்தர்கள் 10 மணிநேரம் வரை காத்திருந்து அய்யப்பனை வழிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காக சபரிமலையில் தரிசனத்துக்கான நேரம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. கார்த்திகை மாதத்தையொட்டி மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 16ம் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.
நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு வரை கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தன. தற்போது கட்டுப்பாடுகள் இல்லாத நிலையில் பக்தர்கள் சபரிமலைக்கு அதிகமாக சென்று வருகின்றனர்.
16 லட்சம் பக்தர்கள் தரிசனம்
பக்தர்கள் முன்பதிவு செய்து அய்யப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த 16ம் தேதியில் இருந்து நேற்று வரை 16 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். கடந்த மாதம் தினமும் சராசரியாக 65 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்தனர். டிசம்பரில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. டிசம்பர் முதல் வாரத்தில் 80 ஆயிரமாக இருந்த பக்தர்களின் எண்ணிக்கை 2வது வாரமான தற்போது கிடுகிடுவென அதிகரித்துள்ளது.
1 லட்சத்தை தாண்டிய பக்தர்கள்
நேற்று முன்தினம் மிக அதிகமாக 1,07,695 பேர் முன்பதிவு முன்பதிவு செய்து தரிசனம் செய்து இருந்தனர். நாளைய தரிசனத்துக்காக 1 லட்சத்து 7 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கை சேர்ந்த பக்தர்கள் மாலையிட்டு விரதம் கடைப்பிடிக்கும் நிலையில் வரும் நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்ட நெரிசலில் காயம்
இந்நிலையில் தான் பக்தர்கள் தற்போது 8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை நீண்டவரிசையில் காத்திருந்து சபரிமலையில் தரிசனம் செய்து வருகின்றனர். இதற்கிடையே தான் கோவில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பக்தர்கள் காயமடைந்தனர். இதனால் CR கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சிய தேவசம்போர்டுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் தினசரி தரிசனத்துக்கான பக்தர்களின் எண்ணிக்கை 85 ஆயிரமாக குறைக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தரிசன நேரம் நீட்டிப்பு
இந்நிலையில் தான் தற்போது பக்தர்களின் வசதிக்கான கோவிலில் தரிசனம் செய்வதற்கான நேரம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு அடைக்கப்பட்டு வருகிறது. மாலையில் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு அடைக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நேர நீட்டிப்பு காரணமாக இன்று முதல் இரவு 11 மணிக்கு பதில் இரவு 11.30 மணிக்கு நடை அடைக்கப்படும் என தேவசம் போர்டு தலைவர் ஆனந்தகோபன் கூறியுள்ளார்