இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து வரும் 12-ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு ஆகியோர் போட்டியிடுகின்றனர். அமமுக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டார். இந்நிலையில் டிடிவி தினகரன் தற்போது யாருக்கு ஆதரவு அளிப்பார் என்ற கேள்வி எழுந்தது.
தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எம்ஜிஆரிடமும் – ஜெயலலிதாவிடமும் இருந்த வரை இரட்டை இலை சின்னம் செல்வாக்காக இருந்ததாகவும், தற்போது அதன் செல்வாக்கு குறைந்து வருவதாகவும் கூறினார். எடப்பாடி பழனிசாமி வசம் இருக்கும் வரை தமிழ்நாடு முழுவதும் இரட்டை இலை சின்னம் செல்வாக்கை இழக்கும் எனவும் இரட்டை இலை சின்னைத்தைக் காண்பித்து கூடுதலாக 5 ஆயிரம் அல்லது 10 ஆயிரம் வாக்குகள் பெற முடியுமே தவிர இடைத்தேர்தலில் வெற்றி பெற முடியாது என்வும் டிடிவி தினகரன் குறிப்பிட்டார்.
குக்கர் சின்னம் கிடைக்கவில்லை என்பதால்தான், தேர்தலில் போட்டியிடவில்லையே தவிர, தங்களை யாரும் நிர்பந்திக்கவில்லை எனவும் டிடிவி தினகரன் விளக்கமளித்தார்.