உத்தியோகபூர்வ வங்கி முறையின் ஊடாக புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற்கு வரி விதிக்கப்படாது என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் அமைச்சில் நேற்று முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும் மாதாந்திர வருமான வரி தொடர்பான நிலைமையை விளக்கிய அமைச்சர், உத்தியோகபூர்வ வங்கி முறைக்கு வெளியே சட்டவிரோதமாக அனுப்பப்படும் பணத்திற்கு வரிச் சலுகை கிடைக்காது என்றார்.
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு பணம் அனுப்பும் நபர்கள் தொடர்பில் மத்திய வங்கி மற்றும் இலங்கை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், இதுவரை பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
“நீங்கள் சம்பாதித்தவுடன் பணம் செலுத்தும் வரி முறை நாட்டில் உள்ளது. ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளி நாட்டின் வரிக் கொள்கைகளுக்கு உட்பட்டவர்.
எனவே, அவர்கள் சம்பாதிக்கும் பணத்தில் அந்த நாடு தொடர்பான வரித் தொகை செலுத்தப்பட்டுள்ளது. எனவே அவர்கள் இந்த நாட்டுக்கு அனுப்பும் வெளிநாட்டுப் பணத்திற்கு இனி ஒருபோதும் வரி விதிக்க மாட்டோம்.
அவ்வாறு செய்வது நெறிமுறை அல்ல. ஆனால் நாட்டின் அதிகாரப்பூர்வ வங்கி முறை மூலம் வெளிநாட்டு நாணயங்களில் பணம் அனுப்பினால் மட்டுமே இந்த வரிச் சலுகை கிடைக்கும்.
மற்ற சட்டவிரோத வழிகள் மூலம் இந்த நாட்டுக்கு பணம் அனுப்புவதன் மூலம் வரிச் சலுகைகளை எதிர்பார்க்காதீர்கள். அவர்கள் நிச்சயமாக புதிய வருமான வரிக்கு உட்படுத்தப்படுவார்கள்”. என்றார் அமைச்சர்.