ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுவதால், அதிமுக பொதுக்குழு வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கக் கோரி, எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் இன்று முறையிட உள்ளது. இதனால், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்யப்பட்ட நிலையில், இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, ரிஷிகேஷ் ராய் அமர்வு தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்ய வசதியாக, இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கி இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு நீதிபதிகளிடம் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர்கள் கடந்த வெள்ளிக்கிழமை முறையிட்டனர்.
வேட்புமனுத் தாக்கலுக்கான கடைசி தேதி உள்ளிட்ட விவரங்களைக் கேட்டறிந்த நீதிபதிகள், இன்று முறையிடுமாறு கூறினர். இதன்படி, நீதிபதிகள் முன்னிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு இன்று முறையிட உள்ளது. வேட்புமனுத் தாக்கலுக்கான இறுதி நாளுக்குள் தீர்ப்பு வழங்க முடியாவிட்டால், நிவாரணம் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று நீதிபதிகள் ஏற்கனவே உறுதியளித்துள்ளனர். இதனால், இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.