அடுத்த வருடம் முதல் மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிப்பது அவசியம் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.
நேற்று பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் நேற்று அமைச்சரவையில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.
மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காமல் மின்சார சபையின் நஷ்டத்தைக் குறைக்க மாற்றுத் திட்டத்தைச் செயற்படுத்துமாறு அமைச்சர்கள் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், மின்சார கட்டணத்தை அதிகரிக்காமல் தற்போதுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் திரு.காஞ்சன விஜேசேகர அங்கு தெரிவித்தார்.
கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் தினமும் சுமார் 06 மணிநேரம் மின்சாரம் தடைப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சில நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும், மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் அமைச்சரவையில் சுட்டிக்காட்டினார்.
எனினும் குறித்த கட்டண அதிகரிப்பு தொடர்பில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படாமலேயே கலந்துரையாடல் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.