2023-24 மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார். அடுத்தாண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால், பிரதமர் மோடியின் தற்போதைய அரசின் கடைசி முழு பட்ஜெட் இதுவே. இதனால், பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது.
பொதுவாக சம்பளதாரர், தொழில்துறையினர், விவசாயிகள், ரயில்வே துறை ஆகிய துறைகளில் பட்ஜெட் சார்ந்த எதிர்பார்ப்புகள் உள்ளன. ஒவ்வொரு பட்ஜெட்டிலும் சம்பளம் பெறும் ஊழியர்கள் வரி விலக்குகள் மற்றும் ஸ்லாப் விகிதங்களின் அதிகரிப்பு குறித்து சில முக்கிய அறிவிப்புகளை எதிர்பார்த்து காத்திருப்பது வழக்கம். தற்போது, வரி செலுத்துவோர் வரிகளை தாக்கல் செய்யும் போது இரண்டு வரி முறைகளில் ஒன்றைத் தேர்வு செய்யலாம், இதன் மூலம் அவர்களின் வருமானம் ரூ. 2.5 லட்சம் வரை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ. 5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு எந்த வரியும் பொருந்தாது. வரப்போகும் பட்ஜெட்டில் வருமான வரி அடுக்கில் தொகை உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு சம்பளதாரர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.
அதேபோல், கடந்தாண்டு இந்திய ரிசர்வ் வங்கி ரொப்போ வட்டி விகிதத்தை பல முறை உயர்த்தியது. இதன் காரணமாக தனிநபர் கடன் வங்கிக் கடன் தொடங்கி அனைத்து வகையிலான வங்கிக் கடன் வட்டியும் கணிசமாக அதிகரித்து. மற்றக் கடன்களை விடவும் வீட்டுக்கடன் நீண்ட காலக் கடன் என்பதால் ரெப்போ வட்டி உயர்வு அதிக பாதிப்பை தந்துள்ளது. எனவே,வீட்டுக்கடன் தொடர்பாக சலுகைகள் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் இடையே உள்ளது. வங்கியில் கடன் பெற்று அதில் வீடு வங்கி அதிலேயே குடியிருக்கும் வீட்டுக்கடன்காரர்களுக்கு எதிர்வரும் பட்ஜெட்டில் வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல், வேளாண் துறையிலும் முக்கிய அறிவிப்புகளை விவசாயிகள் எதிர்நோக்கியுள்ளனர். தற்போது PM-KISAN நிதியுதவித் திட்டத்தை மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்பட்டு வருகிறது. இது ரூ.2,000 என மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. இந்த நிதி உதவி தொகையை ரூ.2000 அதிகரித்து ஆண்டுக்கு ரூ.8000 வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல், ரயில்வே துறையை நவீனமயமாக்க பல திட்டங்களை பட்ஜெட்டில் அரசு அறிமுகப்படுத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது. நாட்டின் அதி நவீன அதிகவேக சிறப்பு ரயில் திட்டமாக வந்தே பாரத் திட்டம் உள்ளது. இந்த திட்டத்தை முழு வீச்சில் கொண்டு செல்லும் விதமாக 400 முதல் 500 வரை புதிய வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பூஜ்ய கார்பன் உமிழ்வு என்ற இலக்கை நோக்கி ரயில்வே தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன்படி, 2030 ஆண்டுக்குள் நாட்டின் ரயில்பாதைகளை முழுமையாக மின்மயமாக்கும் திட்டத்தை அரசு கொண்டுள்ளதால் இது தொடர்பான திட்ட அறிவிப்புகள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. எனவே, வரும் பட்ஜெட்டில் ரயில்வே உட்கட்டமைப்பு திட்டங்கள், சேவை மேம்பாட்டு திட்டங்களுக்காக ரயில்வேத் துறைக்கு ரூ.1.9 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.