தென் கிழக்கு நாடுகளில் ஒன்றாக பிலிப்பைன்ஸில், கொரோனா அச்சுறுத்தலால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து வரலாறு காணாத வகையில் பணவீக்கம் உயர்ந்தது. இதனால், காய்கறிகள், உணவுப் பொருள்களின் விலையும் முன் எப்போதும் இல்லாத வகையில் எகிறி வருகிறது. உள்நாட்டு உற்பத்தி மற்றும் இறக்குமதி குறைந்து வருவதும் இந்த விலையேற்றத்துக்கு மற்றொரு காரணமாக பார்க்கப்படுகிறது. அதனால், அதிகரித்து வரும் செலவுகளை கட்டுப்படுத்த மார்ச் மாதத்திலிருந்து சுமார் 22 ஆயிரம் டன்னிற்கு காய்கறிகளை பிலிப்பைன்ஸில் இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாய நல அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இதனிடையே பிலிப்பைன்ஸ் நாட்டின் மிக முக்கிய உணவு பொருளாக இருந்து வரும் வெங்காயத்தின் விலையேற்றம் மக்களிடையே கூடுதல் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரிய வெங்காயம் பல மடங்கு விலை உயர்ந்து ஒரு கிலோ இந்திய மதிப்பில் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது ஒரு நாள் சராசரி வருமானத்தை விட அதிகம் என்றும் இறைச்சி விலையை மிஞ்சி விட்டதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சற்று விலை குறைந்தாலும், வெங்காயம் இன்னும் தங்களுக்கு ஆடம்பர பொருளாகவே உள்ளதாக அந்நாட்டு மக்கள் கூறுகின்றனர். இதன் தாக்கமாக வெங்காயங்களை திருடுவது, திருமணத்துக்கு பரிசாக வழங்குவது என அந்நாட்டில் பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. மற்றொரு புறம், உணவுப்பொருட்களின் சுவையை கூட்ட வெங்காயத்துக்கு பதில் மாற்று பொருளை உணவு விரும்பிகள் தேட தொடங்கி உள்ளனர்.