மும்பை: சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகாராஷ்ட்ரா உயர்கல்வித் துறை அமைச்சர் சந்திராகாந்த் பாட்டீல் முகத்தில் மர்மநபர் ஒருவர் கருப்பு மையை வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சர் மீது கறுப்பு மை வீசப்பட்டதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமைச்சரின் பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும் அக்கட்சி கூறியுள்ளது.
இதனிடையே, மை வீசிய நபர் உட்பட 3 பேரை கைது செய்துள்ள போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் தேசியவாத காங்கிரஸ் கட்சி தொண்டர் என்பது தெரியவந்துள்ளது.
அம்பேத்கர் குறித்து படிக்க வேண்டும்”
மகாராஷ்டிரா உயர்கல்வித் துறை அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல், அவுரங்காபாத் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார். அப்போது மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், ‘பாபா சாஹேப் அம்பேத்கர், மகாத்மா ஜோதிபா புலே ஆகியோர் இந்த சமூத்துக்கு செய்த பங்களிப்பு மகத்தானது. கல்வித்துறைக்கு அவர்கள் செய்த தொண்டுகள் ஏராளம். அவர்களை பற்றி மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அவர்களை படிக்க வேண்டும்
“பிச்சை எடுத்தார்கள்“
அம்பேத்கரும், ஜோதிபா புலேவும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பிள்ளைகளும் படிக்க வேண்டும் என்பதற்காக கல்வி நிறுவனங்களை தொடங்கினார். ஆனால், அதற்காக அவர்கள் அரசாங்கத்தை நம்பவில்லை. அரசாங்கத்திடம் நிதியுதவியை கூட அவர்கள் கேட்கவில்லை. மாறாக, அவர்கள் வீடு வீடாக சென்று, ‘நான் கல்வி நிலையம் தொடங்குகிறேன். தயவுசெய்து பணம் தாருங்கள்’ என்று பிச்சை எடுத்தனர். அவ்வாறு பிச்சையெடுத்து கிடைத்த பணத்தில் அவர்கள் கல்வி நிலையங்களை நடத்தினர்’ என சந்திரகாந்த் பாட்டீல் பேசினார்.
கறுப்பு மை வீச்சு
அம்பேத்கரை பிச்சை எடுத்ததாக அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் பேசியது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. அவரது இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகாராஷ்டிராவில் பல இடங்களில் போராட்டங்களும் நடைபெற்றன. ஆனால், தனது பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும், இதற்காக நான் மன்னிப்பு கேட்க போவதில்லை என்றும் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்தார்.
இந்நிலையில், புனேவில் உள்ள ஒரு முன்னாள் கவுன்சிலர் வீட்டுக்கு இன்று சந்திரகாந்த் பாட்டீல் சென்றிருந்தார். பின்னர் வீட்டை விட்டு அவர் வெளியே வந்த போது, திடீரென ஒரு நபர் ஓடி வந்து அவரது முகத்தில் கறுப்பை பையை வீசினார். அப்போது மையை எறிந்தவரும், அவருடன் இருந்த 2 பேரும் அமைச்சருக்கு எதிராக கோஷமிட்டனர். பின்னர் அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
“அப்படி என்ன தவறாக கூறிவிட்டேன்?”
இதுகுறித்து சந்திரகாந்த் பாட்டீல் கூறுகையில், ‘தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். வேண்டுமென்றே எனது பேச்சை திரித்து அரசியல் ஆக்குகின்றனர். வீடு வீடாக சென்று அம்பேத்கர் நன்கொடை பெற்றதையே, மக்களுக்கு எளிதில் புரியும் வகையில் பிச்சை எடுத்தார் எனக் கூறினேன். இதில் என்ன தவறு இருக்கிறது? மை வீசியதால் எனக்கு ஒன்றும் ஆகிவிடவில்லை. உடையை மாற்றிக்கொண்டு எனது வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டேன்’ என்றார். இதனிடையே, இந்த சம்பவத்திற்கு பாஜக மூத்த தலைவரும், மகாராஷ்ட்ரா துணை முதல்வருமான தேவேந்திர பட்னவீஸும் கண்டனம் தெரிவித்துள்ளார்