Wednesday, April 24, 2024
Homeவாழ்வியல்அதிகரித்தது வரும் மாரடைப்பு மரணம் …அறிகுறிகள் என்ன..? எவ்வாறு முன்கூட்டியே அறிந்து கொள்வது..?

அதிகரித்தது வரும் மாரடைப்பு மரணம் …அறிகுறிகள் என்ன..? எவ்வாறு முன்கூட்டியே அறிந்து கொள்வது..?

இன்றைய காலகட்டத்தில் மாரடைப்பு மற்றும் இருதய நோய் இயல்பானதாக இருந்தாலும், மக்களை அச்சுறுத்தி வருகிறது. வயதானவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு வரும் என்ற மனநிலை மாறிவிட்டது. ஏனென்றால், இளைஞர்கள் கூட இருதய செயலிழப்பால் இறக்கும் சம்பவங்களும் அதிகரித்துள்ளது. அவ்வளவு ஏன், கட்டுமஸ்தான உடல் உள்ளவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களும் கூட இருதய பாதிப்பு மற்றும் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுகின்றனர்.

மாரடைப்பால் நேற்று நாம் பார்த்த நபர் இன்று இல்லை என்றால், “நேத்து தான் பாத்தன்… மனுஷன் நல்லாதானே இருந்தாரு…. இப்படி ஆகிருச்சே” என்று வருத்தப்பட்டிருப்போம். மாரடைப்பு ஆரோக்கியமானவர்களுக்கும் வரும் என்பதற்கு எடுப்பான காரணம் இது. இருதய நோய் வருவதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

இதய நோய் திடீரென்றெல்லாம் வருவதில்லை. அது நமக்கு சில அறிகுறிகளையும் காட்டும். அதாவது, சில சமயங்களில் நெஞ்சில் அடிக்கடி சுருக்கென வலிப்பது, ஒருபக்கம் மட்டும் நெஞ்சு அடிக்கடி வலிப்பது போன்ற அறிகுறிகளை நாம் சில சமயங்களில் கண்டு கொள்வதில்லை. ஆனால், இவை காலப்போக்கில் இருதய நோய்களை ஏற்படுத்தும்.

இது குறித்து சர் கங்காராம் மருத்துவமனையின் இன்டர்நேஷ்னல் கார்டியாலஜிஸ்ட் மற்றும் எலக்ட்ரோபிசியாலஜிஸ்ட் டாக்டர் அமன் மகிஜா கூறுகையில், மாரடைப்பு (Heart Attack) மற்றும் திடீர் இதய பாதிப்பு (Cardiac Arrest) என்பது ஒன்றுக்கொன்று மாற்றாக பயன்படுத்தப்படும் வார்த்தைகள் எனத் தெரிவித்துள்ளார்.

தமனிகளில் ஏற்படும் அடைப்பால் தான் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரு நபருக்கு திடீர் என நெஞ்சு வலி, அதீத வியர்வை வெளியேறுதல், படபடப்பு மற்றும் பதட்டம், ஒழுங்கற்ற இதயத்துடிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இதற்குக் காரணமாக இருக்கிறது என்கிறார் டாக்டர் அமன் மகிஜா.

இருதய நோய்க்கான காரணங்கள் :

இருதய நோய்களுக்கான முதல் காரணம் ஆரோக்கியமற்ற மற்றும் சோம்பேறித்தனமான வாழ்க்கை முறை. உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய் ஆபத்து உள்ளவர்கள், எந்த செயல்பாடும் இல்லாத வாழ்க்கை முறையில் இருந்தால் அவர்களுக்கு திடீரென மாரடைப்பு ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். புகையிலை, மது, சிகரெட் பழக்கம் உள்ளவர்களுக்கும் இருதய பாதிப்புகள் ஏற்படும்.

உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பு ஆகியவையும் இதய நோய்கள் வருவதற்கான காரணங்கள் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதுமட்டும் அல்லாமல், பரம்பரையாக இதய நோய் வருவதற்கும் சாத்தியம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒழுங்கற்ற இதயத்துடிப்பு, அர்ரித்மியா, கரோனரி இதயநோய் உள்ளிட்டவை பிற இதய நோய்களாகும்.

இதயத்தை ஆரோக்கியமாக வைக்க என்ன செய்யலாம்?

> பரம்பரையாக இதய நோயால் பாதிக்கப்படுபவர்கள், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொண்டால் இதய நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.

> ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்த வாரத்துக்கு மூன்று அல்லது 4 முறை மிதமான மற்றும் தீவிரமான உடற்பயிற்சிகளை செய்யலாம். குறைந்தபட்சம் 40 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.

> குடிப்பழக்கம், புகைபிடித்தல், அதிக நேரம் வேலை செய்தல், சரியான நேரத்தில் தூங்காமல் இருப்பது போன்ற ஆரோக்கியமற்ற பழக்கங்களை தவிர்க்கவும். இதில், ஏதேனும் ஒன்றை பின்பற்றுபவராக இருந்தால் கூட மன அழுத்தம் ஏற்பட்டு இதய நோய் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

> ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்ற வேண்டும். உப்பு மற்றும் சர்க்கரை பயன்பாட்டை சமச்சீராக பயன்படுத்திக் கொள்வது நல்லது.

> குறிப்பிட்ட கால இடைவெளியில் இதயம் சார்ந்த முழு உடல் பரிசோதனைகளை செய்து கொள்ளுங்கள். இதன் மூலம் இதயம் உள்ளிட்ட பாதிப்புகளை முன்கூட்டியே கணித்து முன்னெச்சரிக்கையாக இருக்கலாம்.

> இதய நோய் பாதிப்பு இருப்பவர்கள் மூச்சுத் திணறல் மற்றும் சோர்வு, தலைவலி, மார்பு வலி போன்ற அறிகுறிகள் வந்தால் அலட்சியமாக இருக்கக்கூடாது. இவை திடீர் மாரடைப்புக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். இதுகுறித்து மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments